- தேவன்னை
- பெரிய நாயகி மாதா
வரலாறு
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, புடவையும், நகைகளும் அணிந்திருப்பார். இந்த மேரி மாதாவுக்குப் பெரியநாயகி அன்னை என்று பெயர். வீரமாமுனிவர் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் இந்த சொரூபம் உருவாக்கப்பட்டது.
இந்த தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உண்டு. ஆரியனூர் என்று அழைக்கப்படும் கோணான்குப்பம் முன் காலத்தில் சிறிய காடாக இருந்தது. மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது அங்குள்ளவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அச்சமயத்தில், இந்தியா வந்திருந்த வீரமாமுனிவர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். ஒரு சமயம் ஆரியனூர் காட்டு வழியாக கால்நடையாக நடந்து போன அவர், ஒரு மரத்தடியில படுத்து ஓய்வெடுத்தார். அப்போது, அவர் வைத்திருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.
வழியில், அந்தக் காட்டுக்குச் சொந்தக்காரான கச்சிராயர் என்ற பாளையக்கார ஜமீனை மரியாதை நிமித்தமாக வீரமாமுனிவர் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னிட மிருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போனதை அவரிடம் கூறிவிட்டுப் புறப்பட்டுப் போகிறார்.
ஒருநாள், பாளையக்காரர் கனவில் தோன்றிய மேரி மாதா, தான் காட்டில் மறைந்திருப்பதாகச் சொல்கிறார். அடுத்த நாள், பாளையக்காரர், வேலையாட்களுடன் போய் காடு முழுக்கத் தேடி, வீரமாமுனிவரிடமிருந்து தொலைந்த மாதா சொரூபத்தைக் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்தப் பகுதியிலேயே சிறியதாக ஆலயம் ஒன்றைக் கட்டி, மேரி மாதா சொரூபத்தை வைத்து வழிபடத் தொடங்குகிறார்.
அந்த நேரத்தில், நீண்ட காலம் வாரிசு இல்லாமல் இருந்து அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகிறது. இத்தகவல் அப்பகுதி முழுவதும் பரவி, பொதுமக்கள் அந்தச் சிறிய ஆலயத்துக்கு வரத் தொடங்கினார்கள்.
மற்றொரு முறை அதே வழியாக வந்த வீரமாமுனிவர், அங்கே ஒரு சிறிய ஆலயம் இருப்பதையும், அதில், தன்னிடம் தொலைந்து போன மாதாவின் திருச்சிலை இருப்பதையும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.
பின்னர், அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் இப்போது இருக்கும் தேவாலயத்தைக் கட்டி, மேரி மாதாவின் சொரூபத்தை வைக்கிறார். மேரி மாதாவுக்குப் புடவை, நகைகள் அணிவித்து, தான் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில், மரத்தால் ஆன சிலை உருவாக்கப்பட்டு, அதற்குப் பெரியநாயகி அன்னை என்று பெயரிட்டார்.
அந்தச் சிலை இப்போதும் அங்கே காட்சி தருகிறது. போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாயத்தின் சுவர் சுமார் 3 அடி கனம் கொண்டது. ஒரே நேரத்தில், 50 பேர் மட்டுமே இங்கு அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். வீரமாமுனிவர், இந்தியாவில் சில பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டியிருந்தாலும், இது அவரால் கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்பதால், அதன் பழமையோடு பாதுகாக்கப்பட்டு வருகிறது
Source : The Hindu Newspaper
புனித ஜெர்துருத்தம்மாளுக்கு மாதா படிப்பித்த ஜெபம்
மகிமையில் இலங்கி என்றென்றும் அமைதியில் வீற்றிருக்கும் மூவொரு இறைவனின் வெண்மையான லீலியே, விண்ணுலகில் வாழ்வோர்க்கு மகிழ்ச்சியாகிய சிறந்த ரோசா மலரே வாழ்க! விண்ணுலக அரசரை ஈன்றெடுக்கவும், அவருக்குப் பாலூட்டி வளர்க்கவும் பேறு பெற்ற அன்னையே.உம்முடைய வரங்களை எங்கள் ஆன்மாக்களில் பொழிந்து உணவாகச் செய்தருளும் தாயே ஆமென்
புது தம்பதியர் புனித பெரியநாயகி மாதாவுக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்
எப்பொழுதும் கன்னிகையும் மாதாவுமாயிருக்கிற புனித மரியாயே! இதோ இன்றைக்கு எங்களுடைய இராக் கிளியும் எங்களுடைய பாதுகாவலியும் எங்களுடைய சிபாரிசுக்காரியுமாய் உம்மைத் தெரிந்து கொள்கிறோம். உம்மை ஒரு போதும் நாங்கள் மறுதலிப்பதில்லையென்றும் உமக்குக் கஸ்தி கொடுக்கக் கூடிய வார்த்தை ஒன்றும் சொல்லுவதில்லை என்றும் அத்தகைய கிரிகை ஒன்றும் செய்வதில்லை என்றும் உம்முடைய மகிமைக்குப் பங்கம் எவராலும் வருவிக்க விடமாட்டேன் என்றும் உறுதியான தீர்மானம் செய்கிறோம். எங்களுடைய அந்தஸ்தின் கற்பை நாங்கள் காப்பாற்றுவதிலும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உமது வல்லப முள்ள சிபாரிசினால் பிரமாணிக்கம் உள்ளவர்களாய் இருப்போம் என்று வாக்களிக்கிறோம்
புனித பெரிய நாயகியே, உமது சிபாரிசினாலே சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்து அருளும் பிள்ளைகளை நாங்கள் தேவ பயபக்தியில் வளர்ப்போம் என்று உமக்கு முன்பாக உறுதியான தீர்மானம் செய்கிறோம்.
நாங்கள் உமது ஊழியத்தில் எப்பொழுதும் நிலைத்திருக்கும் படியாக எங்கள் சகல கிரிகைகளிலும் உதவி புரிய வேண்டுமென்றும் விசேஷமாய் எங்கள் மரண நேரத்தில் எங்களைக் கைவிடாதேயும் என்றும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
பெரியநாயகியான புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட பெரிய நாயகியே ,
பரலோக பூலோக இராக்கினியான மாசில்லாமல் உற்பவித்த பெரிய நாயகியே
ஆதி முதல் நிகரற்ற பரிசுத்தத்தனமாய்ப் பிறந்த பெரிய நாயகியே
எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய பெரியநாயகியே
விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த பெரிய நாயகியே
பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும் ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின பெரியநாயகியே
தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட சீவிய காலம்ளவும்
இப் பரதேச துன்பங்களை அத்தியந்த தைரியம் பக்தி பொறுமை முதலிய
சற்குணங்களோடு அனுபவித்த பெரிய நாயகியே
இவ்வுலகத்தில் இருந்த நாள் மட்டும் அதிகம் அதிகமாய் எல்லா வரங்களிலும்
அதிகரித்து நிகரில்லாத புனித புண்ணிய சம்பாவனையடைந்த பெரிய நாயகியே
உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை
முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய பெரிய நாயகியே,
இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே
சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய பெரிய நாயகியே,
அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால்
பேரின்ப சந்தோஷமடைந்த பெரிய நாயகியே,
தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து
பரலோகத்தில் சேர்ந்த பெரிய நாயகியே,
சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய
திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த பெரிய நாயகியே ,
சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத்
தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி
அடக்கம் செய்யப்பட்ட பெரிய நாயகியே,
மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட
சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட பெரிய நாயகியே,
மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப
இராச்சியத்துக்கு எழுந்தருளின பெரிய நாயகியே,
அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த பெரிய நாயகியே,
அப்பொழுது சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில்
அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக்
கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,
பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே
மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட பெரிய நாயகியே,
பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த
நாமதேயம் சூட்டப்பட்ட பெரிய நாயகியே,
வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும்
அதிகரித்து விளங்கின பெரிய நாயகியே,
மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும்
ஞான தீபமாகவும் ஒளிர்ந்த பெரிய நாயகியே,
அருள் நிறைந்த மரியே வாழ்க என்று
தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட பெரிய நாயகியே,
நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே
கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற பெரிய நாயகியே,
தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் ,
பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத பெரிய நாயகியே,
அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய
பெரிய நாயகியே,
தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய்,
பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற பெரிய நாயகியே,
சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த்
தேவாலயமுமாய் விளங்கிய பெரிய நாயகியே,
எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய
திருப்பாடுகளுக்குப் பங்காளியான பெரிய நாயகியே,
அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும்
அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த பெரிய நாயகியே,
சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு
ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன பெரிய நாயகியே,
அப்பொழுது சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில்
அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு ஸ்தித்துக்
கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,
உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற
சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட பெரிய நாயகியே,
பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும்
வணங்கிக் கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,
சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால்
மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட பெரிய நாயகியே,
உம்முடைய திருக்குமாரனின் அண்டையில்
மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற பெரிய நாயகியே,
உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் பெரிய நாயகியே,
அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை
ஆடையாகச் சூரியனை அணிந்த பெரிய நாயகியே,
பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் பெரிய நாயகியே,
சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான
பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான
பெரிய நாயகியே,
சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற பெரிய நாயகியே,
நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப்
பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் பெரிய நாயகியே,
தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற பெரிய நாயகியே,
கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய பெரிய நாயகியே,
எண்ணிறந்த நன்மை அற்புதங்களால்
உமது வல்லமையை விளங்கச் செய்தருளின பெரிய நாயகியே,
பல முறை இராச்சியங்களையும் , பட்டணங்களையும் ,
குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய பெரிய நாயகியே,
சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால்
உமது தயாளத்தைக் காட்டியருளிய பெரிய நாயகியே,
எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த பெரிய நாயகியே,
பாவிகளுக்கு அடைக்கலமாகிய பெரிய நாயகியே,
இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத பெரிய நாயகியே,
உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா பெரிய நாயகியே,
சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு
அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய பெரிய நாயகியே,
சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும்
மகிமையினாலும் விளங்குகிற பெரிய நாயகியே,
சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம்
பெற்றிருக்கிற பெரிய நாயகியே,
படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும்
மன்றாடவும் வணங்கவும் படுவதற்குப் பாத்திரமான பெரிய நாயகியே,
கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய பெரிய நாயகியே,
சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான பெரிய நாயகியே,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக
சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே /
உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின்
உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய்
அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு
எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும்
கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்.
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென்
பின் குறிப்பு : வீரமாமுனிவரால் தமிழர் கலாச்சாரத்தின் படி சேலை அணிந்தவராய் சுரூபம் வடிவமைக்கப்பட்டவர் புனித பெரிய நாயகி மாதா . பிரார்த்தனை , புனித மோட்ச இராக்கினியின் பிரார்த்தனையை ஒத்திருக்கிறது